முன்னுரை

1915ல் தன் 45ம் வயதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிரந்தரமாக இந்தியா திரும்பியபின், அதற்கடுத்த முப்பது வருடங்களில் யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் ஆகிய அவரது ஆங்கில பத்திரிகைகளில் வெளியானவை, மற்ற இந்திய மொழிகளில் எழுதியவை, நேர்காணல் மற்றும் மேடைப்பேச்சுகள் என காந்தியின் கருத்துகள் மொத்தமும் சுமார் 20,000 பக்கங்கள்.

கல்வி, ஆரோக்கிய வாழ்வு போன்ற வெவ்வேறு தலைப்புகளில் வர்த்தமானன் பதிப்பகம் “மகாத்மா காந்தி நூல்கள்” என்று இருபது தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டுள்ளது. அக்காலத்துத் தமிழ் மொழிபெயர்ப்பு முதலில் வாசிப்பு வேகத்தைக் குறைத்தாலும் சுமார் நூறு பக்கங்களுக்குள் பழகிவிடுகிறது.

காந்தியின் பரந்து விரிந்த கருத்துலகின் சுமார் பத்து சதமானம் மட்டுமே வாசித்தபின் எழுதப்படும் கட்டுரை இது. கட்டுரையின் அடிப்படையான நோக்கம் காந்தியின் கருத்துகள் இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக, தேவையாக இருக்கின்றன என்பதை உணர்த்தி அதன்வழியாக நேரடியாக காந்தியை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதே.

 

காந்தியின் அணுகுமுறை

பெண்விடுதலை, மதம், கல்வி, அஹிம்சை என்று எதைப்பற்றியும் தன் கருத்தைச் சொல்வதற்குமுன் அன்றைய தேதிவரை அக்குறிப்பிட்ட விஷயத்தில் உலகளவில் என்னென்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அதன் முடிவுகளைத் தன் சொந்த அனுபவங்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னரே பரிந்துரை செய்கிறார். மேலும் தன் பரிந்துரையின் விளைவுகள் சாதகமாக மட்டுந்தான் இருக்கமுடியும் என்றும் சாதிப்பதில்லை. ஆய்வுகளின் அடிப்படையிலும் தன் அனுபவத்தைத் துணைகொண்டும் ஆராய்ந்து கிடைத்த சிறந்த வழி இதுதான் என்று மட்டுமே சொல்கிறார்.

ஒவ்வொரு விஷயத்தின் ஆழத்துக்கும் அதன் அத்தனை விவரங்களோடும் அவர் செல்வது மலைக்கச்செய்கிறது. உதாரணமாக, ராட்டையைக் கொண்டு கதர் நூற்க முன்வருவோர் – வெறுமனே நூற்பதோடு நின்றுவிடாமல் – தன் சொந்த முயற்சியால் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் என்றொரு நீண்ட பட்டியல் தருகிறார்;

இந்தியாவில் என்னென்ன ரகமான பருத்தி வகைகள் எங்கெங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன? அந்த ரகங்களின் சாதகபாதகங்கள், விலைகள் என்ன? அதில் எவ்வளவு உள்நாட்டில் உபயோகப்படுத்தப்படுகிறது? எவ்வளவு ஏற்றுமதி? அதில் இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் எவ்வளவு? என்று ஆரம்பித்து ஐம்பதுக்கும் மேலான கேள்விகள். இதில் பதில்கள் சதுர கஜங்களிலும், ரூபாய்களிலும் இருக்கவேண்டும் என்று அடிக்குறிப்புவேறு!

இவ்வாறு தகவல்கள் அடிப்படையிலும் ஆய்வுபூர்வமாகவும் புரிந்துணர்ந்து ஒரு செயலில் ஈடுபடும்போது நாம் செய்வது சிறுசெயல்தானே என்ற எண்ணத்தைத்தாண்டி காலப்போக்கில் உண்டாகக்கூடிய  பெரும்விளைவைக் காணச்செய்கிறார். அதன்வழியாகச் செயல்பாடுகளில் சலிப்பும், சோர்வும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கிறார்.  இதுவே பொதுவாக காந்தியின் அணுகுமுறை.

 

காந்தியும் கல்வியும்

காந்தியின் கல்வி நாட்கள் சுவாரஸ்யமானவை. காந்தி மருத்துவம் படிக்க ஆசைப்பட்டபோது அவரது அண்ணன் வைஷ்ணவ வழி வந்தவர்கள் பிரேதங்களை அறுப்பது முறையல்ல என்று வழக்குரைஞர்க்குப்  படிக்க லண்டன் அனுப்புகிறார். அவர் நோக்கம் எப்படியாவது காந்தியை ஒரு திவானாக்கிவிட வேண்டுமென்பது. பாரிஸ்டர் படிக்கப் போன இடத்தில் லத்தீன் படிக்க நேர்ந்து தேர்வில் தோற்றது, வேதியியலை விருப்பப்பாடங்களில் ஒன்றாக எடுத்து அது சரிப்படாமல் இயற்பியலுக்கு மாறியது, தென்னாப்பிரிக்காவில் அரைகுறைத் தமிழாசிரியராக இருந்தது என்று நிறைய ரசமான தகவல்களை காந்தியின் கல்வி நாட்களில் காணமுடிகிறது.

ஆரம்பக்கல்வி குறித்த காந்தியின் கருத்துகள் மிகவும் கவனத்திற்குரியவை. மாணவர்களுக்கு அதிக புத்தகங்கள் தேவையில்லை, ஆசிரியர்களுக்குத்தான் தேவை என்கிறார். ஆசிரியர்களே மாணவர்களின் புத்தகங்கள் என்பது இவர் எண்ணம். இரண்டரை வயதுக்குழந்தை தாராளமாக ஒரு மைல் நடந்து பள்ளிக்குச்செல்லலாம் என்றொரு தகவல் தருகிறார். எழுத்துகளைப் பழக்குவதற்குமுன் வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களை குழந்தைகள் பழகினால் கையெழுத்து முத்துமுத்தாக வரும் என்கிறார். இன்னும் எத்தனையோ நுணுக்கமான செய்திகள்.

மிகுந்த சிந்தனைக்கும் சொந்த ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்தவித சிந்தனை முயற்சியுமில்லாமல் அவர்மீது கொண்ட கவர்ச்சியால், பக்தியால் உணர்ச்சிவசப்பட்டுப்  பின்பற்ற முன்வந்து பெரும்பாலோர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

ஓர் ஆசிரியர் தான் அஹிம்சையைக்கடைப்பிடித்து வருவதாகவும் ஆனால் சில மாணவர்களை அடித்துத் தண்டிக்காமல் திருத்தமுடியாது என்ற நிலையில் அடித்தால் அது ஹிம்சை, அடிக்காமல் விட்டால் அம்மாணவர்களைத் திருத்தவேண்டிய தன் கடமையைச் செய்யவியலாத நிலை என்ற இக்கட்டான சூழ்நிலையிலுள்ளதாக காந்திக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தி இப்படி பதிலெழுதுகிறார்;

“முதலில் நீங்களே உங்களை அவர்கள்முன் தண்டித்துக்கொண்டு அவர்களை மனம் மாறச்செய்யலாம் பிறகு அது வேலைசெய்யாத பட்சத்தில் அவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கிவிடலாம். இவ்விரண்டும் அஹிம்சை வழிகள்தான். ஆனால் கோபத்தினால் உந்தப்பட்டு இவற்றுள் நீங்கள் எதைச்செய்தாலும் அது வன்முறைதான்”.

 

காந்தியின் பகுத்தறிவு

பத்துதலை மனிதன் வருகிறான் என்பதற்காக ராமாயணத்தைத் தூக்கியெறிய வேண்டியதில்லை. சிங்கமும் நரியும் மனிதர்களுடன் பேசும் ஈசாப் கதைகள் குழந்தைகளை முட்டாளாக்குவதில்லை, மாறாக அறிவாளிகளாக்குகிறது என்கிறார். கிணற்றுநீரைக் காய்ச்சிக் குடியுங்கள் அல்லது ராட்டையைச் சுற்றுங்கள் என்று நான் சொன்னால் – காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்.

உலகிலேயே தனக்கு ஆகப்பிடித்த கவிதைகள் துளசிதாசருடையது என்று எழுதும் காந்தி அதற்காக துளசிதாசின் மோசமான, காலத்திற்கு ஒவ்வாத கருத்துகளைக் கண்டிக்காமலும் இல்லை. டமாரம், முட்டாள், தாழ்ந்தசாதியர், பெண்கள் ஆகியோரை அடிக்கலாம் என்று துளசிதாஸ் ஓரிடத்தில் எழுதியிருப்பது பிற்காலத்தில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பதாகவும் ஆனால் ஒருவேளை  உண்மையிலேயே அவர் எழுதியதுதான் என்றால் அது கண்டிக்கப்படவேண்டியதே என்று எழுதுகிறார்.

 

ஆரோக்கிய வாழ்வு

ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர். ஆரோக்கியமான மனிதனென்பவன் ஒரு நாளைக்கு சுமார் பத்து மைல் நடக்கமுடியவேண்டும் என்றும், தான் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு ஒரு நாளைக்கு முப்பது அரிசியின் எடைக்குச் சமானமானது என்றும் எழுதியிருப்பது சில உதாரணங்கள்.

அன்றாடம் நாம் கடைப்பிடிப்பதற்குக் கைநிறைய நல்ல பழக்கங்களை அள்ளியள்ளித் தருகிறார். இவையனைத்தும் அவர் சொந்த அனுபவத்தில் பலன்தருகிறது என்பதை உறுதிசெய்துகொண்டே எழுதுகிறார். ‘இவ்வளவுதூரம் வந்துவிட்டேன் மேற்கொண்டு இதையெல்லாம் உங்கள் பொறுப்பில் செய்துபார்த்து நல்லதுகெட்டது தெரிந்துகொள்ளுங்கள்’ என்றெழுதுவது காந்திக்கே உரிய தனித்தன்மை.

ஒரு நாளைக்கு மூன்றுவேளை சாப்பிடலாம். அந்தந்த சீசனில் வரும் பழங்களை காலை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாலும் பழமும் எப்படி போதுமான காலை உணவாக இருக்கமுடியும் என்றெல்லாம் விளக்குகையில் அவற்றின் போஷாக்குப் பங்கீடுகளையும் விரிவாக எழுதி அறிவியல் வலுசேர்க்கிறார்.

காலையில் பல்துலக்கும்போது மூக்கையும் சுத்தம் செய்யவேண்டும் என்று எழுதுபவர் செய்முறைகளையும் விளக்கியிருக்கிறார். 24 மணிநேரத்தில் 5 பவுண்டு (சுமார் 2.25லிட்டர்) தண்ணீர் அருந்தவேண்டும் என்கிறார். தேநீர், காபி, கொக்கோ பானங்களை முற்றிலுமாகவே தவிர்த்துவிடச்சொல்கிறார். அதற்குபதில் காய்கறி சூப் சாப்பிடப் பரிந்துரைக்கிறார்.

சீனாவில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருந்தபோது நீரைச்சுடவைத்து அருந்தும் வழக்கம் வந்ததாம். ஒரு புத்திசாலி சீனர் தேவையான அளவு நீர் சுட்டுவிட்டதா என்று கண்டறிய தேயிலையை அதில் போட்டு நீர் நிறமாற்றம் அடைவதைக்கொண்டு உறுதிசெய்துகொள்ளும் முறையை  அறிமுகப்படுத்தினாராம். நீர் தேவையான அளவு சுட்டுவிட்டதை உறுதிசெய்வதோடு அதற்கு ஒரு மணமும் உண்டானதால் இதை அனைவரும் விரும்பினார்களாம். இவ்வாறு குறிப்பிடும் காந்தி,  இந்த டீ நிச்சயம் நல்லதுதான் ஆனால் நாம் தற்போது சாப்பிடும் பாலும் சர்க்கரையும் நிறைந்த டீ இதுவல்ல என்பதால் விலக்கிவிடச்சொல்கிறார்.

 

ஒரு கல் பல கனிகள்

எந்த ஒரு பரிந்துரையிலும் காந்திக்கு ஒன்றுக்குமேற்பட்ட நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

பிறப்புறுப்புகளின் முன்பகுதியில் நாளாவட்டத்தில் சேர்ந்துவிடும் அழுக்கைக் கவனமாகத் தேய்த்துக் கழுவவேண்டும் என்று அவர் அளிக்கும் சுகாதாரக்குறிப்பின் உள்ளே அவர் பரிந்துரைக்கும் பிரம்மச்சரியத்துக்கு உதவிசெய்யும் ஓர் உள்நோக்கமும் ஒளிந்துள்ளது. அதாவது அடிக்கடித் தொட்டு உணரப்படும் ஓர் உறுப்பு தன் நுண்ணுணர்வுகளை இழந்துவிடுகிறது என்பதால் பாலுணர்வுத்தூண்டல்கள் குறையும் என்று எதிர்பார்க்கிறார்.

சமைக்காத உணவு வகைகளில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை விளக்கும் காந்தி இது உடலுக்கு இயற்கையாகப் பொருந்துவதோடு ஏழை மக்களுக்கு எங்கும் கிடைத்துவிடுவதையும், பெண்களை சமையலறையிலிருந்து விடுவித்து வெளியேற்றத் துணைசெய்வதையும் முன்வைக்கிறார்.

மீன் சாப்பிடுபவர்களை சாப்பிடாமலிருக்க வற்புறுத்துவது ஹிம்சை என்பதை ஒப்புக்கொள்ளும் காந்தி அவர்களுக்கு மீன் கிடைக்காமல் தடுப்பது சரியல்ல என்கிறார். ஆனால் ஒரேயொரு கோப்பை மதுவை யாருக்கும் எந்தத்தொந்திரவுமில்லாமல் ஒருவர் அருந்தி மகிழ்ந்து உறங்கக்கூடுமாயினும் அதை அவர்க்கு மறுக்கத்தான் வேண்டும், அது ஹிம்சையானாலும் பரவாயில்லை என்று உறுதியாகச்சொல்கிறார். அதற்கு காரணங்கள் நிறைய கூறுகிறார். அவற்றுள் முக்கியமானது மது உடலை மட்டுமல்லாமல் ஆன்மாவையும் பாதிக்கிறது என்பதே.

 

பிரம்மச்சரியம்

ஆரோக்கிய வாழ்வு என்பது பிரம்மச்சரியத்தோடு இணைந்தது என்பது இவரது கருத்து.  தொடர்ந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க சிபாரிசு செய்கிறார். இவரது பிரம்மச்சரியம் திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதல்ல, திருமணத்திற்குப்பின் மக்கட்பேறுக்காக அல்லாமல் இன்பம் மட்டுமே துய்ப்பதற்கான ஆண்-பெண் சேர்க்கையை விலக்கவேண்டும் என்ற கொள்கையுடைய பிரம்மச்சரியம். இதை உடலுக்கு நாம் தரும் ஹிம்சையாக காந்தி கணக்கில்கொள்வதில்லை.

உடற்சேர்க்கை நிகழ்ந்து ஆனால் குழந்தைப்பிறப்பை மட்டும் தடுத்துவிடும் எல்லாவகையான கருத்தடை முறைகளுக்கும் காந்தி எதிரியாக இருந்திருக்கிறார். மதுவை விலக்குவதற்குச் சொன்ன காரணம்தான் இதற்கும். தற்காலச்சூழலுக்குச் சற்றுப்பொருந்தாத கருத்து என்றால் காந்தியின் பிரம்மச்சரியம் குறித்த கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் அவற்றையும் தன் அனுபவத்தின் அடிப்படையிலேயே கூறியிருப்பதால் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவதற்கில்லை.

பகலில் எவ்வளவுதான் கவனமாக இருப்பினும் தூக்கத்தின்போது கண்ட கனவுகளும் ஆக்கிரமித்துத் தன் பிரம்மச்சரியத்தை முழுமையடையவிடாமற் செய்வதாக வருத்தம்கொள்கிறார். கனவிலும் தன் எண்ணங்களைக் கட்டுக்குள் வைப்பதற்கான ஆன்மபலம் பெறவியலவில்லை என்பதில் இறுதிவரை அவர்க்கு ஏக்கம் இருந்துள்ளதைக் காணமுடிகிறது.

 

அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வம்

காந்திக்குத் தேவையில்லாத விஷயம் என்றோ ஆராய்ச்சி செய்ய அவசியமில்லாத விஷயம் என்றோ ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் அசைவம் சாப்பிடாதவராயிருந்தும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சி, அதே விலங்கு இயல்பான முறையில் இறந்துவிட்டபின் அதன் இறைச்சி, விஷம் உட்கொண்டதால் இறந்துவிட்டபின் அதன் இறைச்சி, நோய் வந்து இறந்துவிட்டால் அதன் இறைச்சி இவற்றிற்கிடையில் ஏதும் வேறுபாடுகளுண்டா? ஆம் எனில் எவ்வாறு? என்றெல்லாம் கேள்விகள் எழுதி தன் மருத்துவ நண்பர்களிடம் விடைகளைப்பெற்று வைத்துக்கொள்கிறார்.

காந்தியைக் குறித்து எழுதத்தொடங்கினால் அனேகமாக அவர் எழுதியுள்ள அனைத்தையுமே  குறிப்பிட நேர்ந்துவிடும். ஆகவே இந்த அளவில் நிறுத்திக்கொண்டு காந்தியை அனைவரும் வாசிக்கப் பரிந்துரைப்பது பொருத்தமாக இருக்கும்.

 

முடிவுரை

காந்தியின் எழுத்துக்களை நேரடியாக வாசிக்கும்போது மனதின் ஆழத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி, நிறைவு,  தன்னம்பிக்கை உணர்ச்சி, எதிலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்கிற வேகம்  ஆகியவை உண்டாவதை வாசகர் உணரமுடியும். இது சத்தியத்தின் உள்ளார்ந்த தன்மையாக இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. ஒவ்வொரு விஷயத்திலும் சோதனை முயற்சியில் இறங்கிய காந்தி ஒருவேளை இந்திய சுதந்திரப்போராட்டத்தையும்கூட ஒரு சோதனைமுயற்சியாகத்தான் செய்துபார்த்திருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்ப உலகில், மனிதர்களின் வழக்கமான செயல்பாடுகளை மேலும் சிக்கனமாகவும், வேகமாகவும், பிழையின்றியும் எளிதில் இயந்திரங்கள்  செய்துவிடக்கூடும் என்ற நிலை மேன்மேலும்  நெருங்கிவருகையில், காந்தியின் அணுகுமுறையையும் அறிவியல்-தர்க்க பூர்வமான  ஆராய்ச்சிப்புத்தியையும் பழகிக்கொள்வது  மனித இனத்தை இயந்திரங்களின் பிடிகளுக்குள் சிக்காமல் காப்பாற்றக்கூடும். அதற்கு அவருடைய எழுத்தில் சில நூறு பக்கங்களையாவது வாசித்தால் போதும்.